Tuesday, November 06, 2007

தீபாவளி சிறப்புக் கவிதைகள்


வரப்போகிற பண்டிகைக்காகப்
புத்தாடைகள் வாங்கவேண்டுமென்று
உன்னொருத்தியை மட்டுமே
உடனழைத்துச் சென்ற வேளைதனில்,
உனக்குள்ளிருந்த பசி உறுத்துவாட்ட
உணவுவகைகளைச் சலித்தெடுப்பதில்
செலவானது மொத்த நேரமும்.

பிற்பொழுது வரும் இன்பத்தை விடவும்
தற்பொழுது துய்க்கும் சுகங்கள் வலிமையானவை!

சேர்ந்தே இருக்கட்டும்
பண்டிகையும், பசியும்!

*

ஏனையோர்க்கு எப்பொழுது
வருகிறது தீபாவளி என்று
எனக்குத் தெரியாது!

என்னைப் பொறுத்தவரை
உன் புன்னகைச் சூறாவளி
உரசிச் சென்ற மறுகணமே
விழித்துக் கொண்டது என் தீபாவளி!

நீ மனசுக்குள் உட்கார்ந்து
மணியடிக்கிறாயா?
மத்தாப்பு வைக்கிறாயா?

*

தினம் தினம் பட்டாசாகும் எனக்கு
தீபாவளியில் மட்டும் என்ன சிறப்பு?

புரிந்தும் புரியாதது போலவே
என்னடி அது ஒய்யாரச் சிரிப்பு?

தீபாவளி சிறப்புச் சிரிப்போ?

*

சிக்கிமுக்கிக் கல்லுக்கு
சாப விமோசனம்
கொடுத்த சாகசக்காரி நீ!

என்னைச் சமைக்க,
என்னையே பற்ற வைக்கிறாய் நீ!
எண்ணையும் திரியும்
தீக்குச்சியும் இல்லாமலேயே!

நீ பற்ற வைக்கின்றாயா?
பற்றிக் கொள்ள வைக்கின்றாயா?

*

'பற்றிக் கொள்ளும்
திறன் இருப்பவர்கள்
மட்டும் இங்கே பட்டாசு வாங்கவும்'

இப்படியாய் எழுதத் தோன்றியது
உன் அப்பாவின் வெடிக்கடையில்
நீ சிரித்துக்கொண்டே நிற்கும்
அழகைப் பார்த்ததும்!

*

தீபாவளிக்கு 'கங்கா ஸ்நானம்'
செய்ய வேண்டுமாமே!

சரி சரி.. அதிகாலையில்
வழக்கம் போல என்னை உன்
கண்களால் குளிப்பாட்டு!

உன் கண்களுக்குத் தெரியாதா
என்ன கங்கையின் புனிதத்தைத்
தன் வழியாய் உணர்த்த?

*

வீட்டிலுள்ள எல்லோரும்
தமக்குப் பிடித்த பட்டாசுகளைப்
பங்குபோட்டுப் பிரித்தெடுக்கையில்
நான் மட்டும் இலையில் ஒட்டிய
பனித்துளியாய் நின்றதைப் பார்த்ததும்
அனைவருக்கும் ஆச்சரியம்!

என் மொத்தக் கடையையும்
கொளுத்திப் போடும் ஒரு
ஒற்றைத் தீக்குச்சியை நீ
உன் உதட்டில் வைத்திருப்பது
புரிந்த பின் பிறகென்ன செய்வதாம்!

போருக்குப் பின் அமைதி
என்பது தானே நியதி?

ஆனால் என் வழியில்
போருக்கு முன்னும் அமைதி!

*

தினம் தினம் தீபாவளி
உன் கண்களின் மின்னல் வாயிலாய்,

தித்திக்கும் பொங்கல்
உன் இதழ்க்கடைச் சிரிப்பினூடே,

பொசுக்கிடும் போகி
உன் கவலைகரைக்கும் கனிவில்

எனக்கான பஞ்சாங்கம்
உன்னைச் சுற்றி உலாவுகிறது!

வருடமொரு முறை
வரும் பண்டிகைக்காக
என்னை ஏங்கவே விட்டதில்லை நீ!

*

பழமொழிகளைப் பொய்யாக்குவது
உனக்குப் புதிதல்ல எனினும்
பண்டிகைகளைக் கூடவா நீ
விட்டு வைப்பதில்லை?

வருடப்பிறப்பைப் பொய்யாக்கி,
நாட்பிறப்பை அறிமுகப்படுத்தும் விதமாய்
ஒவ்வொரு நாளும புதிதாய்
உன் அதிகாலை தரிசனம்!

*

அனைவருக்கும் என் இதயங்கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Labels: , ,

 
posted by Raghavan alias Saravanan M at 11/06/2007 03:27:00 PM, |

10 பின்னூட்டங்கள்:

  At Tuesday, November 06, 2007 5:03:00 PM Blogger Mohan நவின்றது:
ஆஹா!!! அற்புதமான கவிதை. உங்களுடைய அனுபவத்திற்கேற்ற வரிகளை முத்தாக பதிதுள்ளீர்கள். உங்களுக்கு எங்களுடைய இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
பட்டாசு கடையை வேடிக்கை பார்பதை கடை முதலாளி பார்த்திருந்தால் உங்களுடைய கதி என்னவாயிருக்கும். !!! :-)
@mohanarajan,

நன்றி நண்பா. உனது வரவு நல்வரவாயிற்று.

உனக்கும் உனது குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

//பட்டாசு கடையை வேடிக்கை பார்பதை கடை முதலாளி பார்த்திருந்தால் உங்களுடைய கதி என்னவாயிருக்கும். !!! :-)//

நல்ல கேள்வி! :) அவருக்கென்ன கொடுத்த வைத்த மகள் என்று பெருமிதத்தில் ஆழ்ந்திருப்பார்! :) சரியா?
  At Tuesday, November 06, 2007 9:28:00 PM Anonymous Anonymous நவின்றது:
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Nice as always.
@pria,

//இனிய தீபாவளி வாழ்த்துக்கள்//

நன்றி. உங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

//Nice as always.//
மகிழ்ச்சி!
Awesome kavithai... :)

Iniya deepavali nal vazhthukkal! :D
@ponnarasi,

//Awesome kavithai... :) //

நன்றி பொன்னரசி.

//Iniya deepavali nal vazhthukkal! :D//

வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
  At Thursday, November 08, 2007 3:26:00 AM Blogger G.Ragavan நவின்றது:
இனிய தீபவொளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

நல்ல கவிதைகள். தீபவொளியிலும் காதலொளி கண்டீர் கண்டீர் கண்டீர்.
@G Ragavan,

வருக வருக! உங்கள் வரவு நல்வரவாயிற்று!

//இனிய தீபவொளித் திருநாள் நல்வாழ்த்துகள்.//

மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கும் உங்கள் சுற்றத்தாருக்கும் என் மனமார்ந்த தீபஒளிப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

//நல்ல கவிதைகள். தீபவொளியிலும் காதலொளி கண்டீர் கண்டீர் கண்டீர்.//

அடடா.. நன்றி இராகவரே! :)
kavithai arumai...

ennai sirikka vaitha varigal

//
புரிந்தும் புரியாதது போலவே
என்னடி அது ஒய்யாரச் சிரிப்பு?

தீபாவளி சிறப்புச் சிரிப்போ?
//
@சீனு,

வாங்க வாங்க.. ரொம்ப நாளாச்சே பாத்து.. நல்லா இருக்கீங்களா?

//kavithai arumai...

ennai sirikka vaitha varigal//

நன்றி சீனு! :)