நிச்சயமாய்த் தினமொரு
முறை பேசியதில்லை!
தேவைகளை உருவாக்கியோ,
தேவைகளைக் கொன்றோ
தொலைபேசியில் விளித்ததுமில்லை!
எழுதும் மடல்களுக்கும்
எந்தவிதப் பதிலுமில்லை!
பரீட்சை முடிவுகள்,
பணிக்குச் சேர்ந்த நாள்,
திருமண வைபவம் முதலான
எவற்றையும் ஞாபக அடுக்குகளில்
பூசி வைத்ததன் தடங்கள் ஏதுமில்லை!
எங்கேனும் தற்செயலாகப்
பார்த்துக் கொண்டால்
தளிர்விடும் சிநேகிதம்.
"உன் இயல்பே அப்படித்தான்",
"பணிப்பளு அதிகமாயிருந்திருக்கும்",
"வேறேதும் சிக்கல் இருக்குமோ"
சமாதானமாய்த் தன்னுள்ளே
கேள்வியும் கேட்டுப் பதிலும் சொல்லிப்
பெருமிதப்படும் உள்ளார்ந்த அன்பு.
இவ்வளவிருந்தும் இந்த உறவை
நட்பென்றழைப்பது எப்படி?
பரஸ்பரம் பேசிக் கொள்ளுதலிலும்,
பதில் சொல்லுதலிலும் மட்டும் தானா
நட்பை உறுதிப்படுத்த முடியும்? என்று
பரிகசித்தாலும், வருடமொரு முறை
எவ்விடத்திருந்தாலும்,
எந்நிலையிலிருந்தாலும்
தொலைபேசியில் விளித்துப்
"
பிறந்தநாள் வாழ்த்து"த் தெரிவிப்பாயே!
அந்தப் பிரியம் ஒன்றே போதுமே!
Labels: நடைமுறை நிகழ்வுகள், நட்பு