பிரதிநிதிகள்
இரு வேளைகள் காக்கவைத்த
வயிற்றுக்குக், காசு இல்லாவிட்டாலும்
கருணையோடு சோறுபோட்ட
உணவக முதலாளியும்,
அடுத்தடுத்து இருந்தாலும்
பார்வைகளைக் கூடத்
தடுக்கப் பழகிவிட்ட
அண்டைவீடுகளின் மத்தியில்
உடல்நிலை சரியில்லாத பொழுதினில்
பாசத்தோடு வெந்நீர் வைத்துப்
பரிவாக விசாரித்தனுப்பும்
தேநீர்க் கடைக்காரரும்,
எனக்கென்ன என்று
வேடிக்கை பார்ப்பவர்களை
எரிச்சலோடு ஏறிட்டு
ஆபத்தில் இருப்பவரை
எதிரேவந்த ஆட்டோவில்
ஏற்றி, "சீக்கிரமா ஆஸ்பத்திரிக்கு
போப்ப்பா" என்று தன்
கடமைகளுக்குத் தற்காலிக
விடுப்புத் தரும் தந்தை தெரசாக்களும்,
அறிமுகமாகிச் சில மாதங்களே
ஆனாலும் கட்டாயத்தின் பூச்சுகள்
கடுகளவும் இல்லாது சிநேகத்தின்
வழியாய்த் தாய்மை காட்டும்
அறைவாசிகளும்,
அள்ளி இறைப்பதற்கில்லை என்று
தள்ளி நிற்காமல் தன்னிறைவோடு
கிள்ளிக் கொடுக்கமுடியும் என்று
சுனாமியோ, பூகம்பமோ, குண்டுவெடிப்போ,
பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகாரமாய்
முடிந்தவரை முகமகிழ்ச்சியோடு
முன்வந்து உதவுபவர்களும்,
"உன் வயதில் நானும் இது போல
இருந்தவன் தான்" என உள்ளுக்குள்
சொல்லிக்கொண்டாலும், கண்டிப்பின்
பேரில் காணும் போதெல்லாம்
கசக்கிப்பிழியாமல், எப்படியும்
"வாழ்க்கைத் பயணத்தில் சில
நிகழ்வு எழுதுகோல்கள் உனக்கு
அனுபவ மை ஊற்றும்" என்று
அர்த்ததோடு சிரித்து அமைதியாய்த்
தட்டிக் கொடுக்கும் அப்பாக்களும்,
சரிக்குச் சரியாய் வேலையிருந்தும்
சகதொழிலாளியின் முகத்தில்
சவுக்கியத்தின் ரேகைகள்
சலவை செய்யப்பட்டிருக்கக் கண்டு
"உன் கவலைகளுக்கும் நான் தோழன்"
என்று கனிவோடு பறைசாற்றி
உள்ளக் குமுறலை உளமாறக் கேட்கும்
உன்னதமானவர்களும்,
கண்ணெதிரே தோன்றும்
கடவுளின் பிரதிநிதிகள்!!
இவர்களை ஒருமுறை பார்த்தால்
உடனடியாய் உள்மனம் குளிரும்!
எப்பொழுது நினைத்தாலும்
தன்னிச்சையாய் உதடுகள் ஒளிரும்!
Labels: நடைமுறை நிகழ்வுகள்