Sunday, May 14, 2006

நடமாடும் தெய்வம்!!!

ஆறறிவு ஜீவராசிகள்
அனைத்திற்கும்
ஆதி என்பதே
அன்னை உன்னால் தானே
ஆரம்பிக்கிறது!

எந்நிலையிலும்
எப்பொழுதும்
எதையுமே
எதிர்பார்க்காத
எளிமையான பொக்கிஷம்!


மண்ணில் விதைத்த நாள்முதல்
புதைக்கும் நாள்வரை
வினைகளே செய்தாலும்
விளையாட்டாகவே எடுத்துக்கொள்ளும்
விஸ்தாரமான மனது
உனக்குள் மட்டும் தானே
உள்ளூர ஊறியிருக்கிறது!

உலகில் உதித்த
கணம் தொட்டுப்
பாசம் என்னும் செடிக்குப்
பாங்காக நீர்வார்த்தவளும் நீதான்!

அம்மா என்னும்
சொல்லைக் கேட்ட
அந்தக் கணம்
பாசம் பொங்காத இதயங்கள்
பாவம் செய்த இதயங்கள்!


இந்த உலகில்
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்
எத்தனை செயல் செய்தாலும்
கடுகளவும் கைம்மாறு
செய்யப்பட முடியாத
மாபெரும் பெருமை
உனது
தாய்மைக்கு மட்டும் தான்!

எத்தனை நிகழ்வுகள்
இன்பமாய் இருந்தாலும்
உந்தன் புடவைத்தலைப்பால்
புதல்வன் என்னைப்
பொத்தி எடுப்பாயே

அந்த ஒரு செயலை விடவா
அகிலத்தில் வேறொரு
ஆனந்தமான நிகழ்வு
இருக்கக் கூடும்?

உலகில் உள்ள
எல்லா உயிர்க்கும்
எந்த மொழிகளையும் விடச்சிறப்பு,
உன் வழியாக வரும்
தாய்மொழி ஒன்றுக்கு
மட்டுமே உண்டு!

இந்த உலகில்
உன் ஒருத்திக்கு மட்டும் தான்
எதைக் கொண்டும்,
எப்பாடு பட்டாலும்,
எந்த சக்தி மூலமும்
ஈடுகட்ட முடியாது!
எனில். அது அந்தச் சூரியனைச்
சுலபமாய்ச் சுண்டுவிரலில்
சுழற்றி விடுவதற்குச் சமம்!
 
posted by Raghavan alias Saravanan M at 5/14/2006 11:39:00 PM, |

0 பின்னூட்டங்கள்: