கனாக் காணும் காலங்கள் - 3
தன் கனவுகளை நோக்கிப் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தான் இன்பராஜன். எண்ணம் போல் வாழ்க்கை என்பதைப் போல அவனுடைய பிஞ்சு மனத்தின் ஆசைக் கனவுகளுக்கு நல்ல வண்ணம் தீட்டினார்கள் வீட்டிலுள்ளோர் அனைவரும். கேபிள் டிவி முதல் மாதமொரு முறை குடும்பத்தோடு பார்க்கும் திரைப்படம் வரை எல்லாப் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் தற்காலிக விடுமுறை விட்டிருந்தார்கள்.
ஜனனிக்கு இன்பராஜனின் கனவுகளின் வீரியம் முழுதாகப் புரிந்திருக்கவில்லை எனினும் தன் வாழ்க்கைக்கேற்ப வளைந்து கொண்டிருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது. அதனால் சற்றே பெரிய மனுஷித் தோரணையில் பெருந்தன்மையாக நடந்து கொண்டாள் சமர்த்தாக.
இன்பராஜன் கண்ணும் கருத்துமாகப் படித்து நல்லமுறையில் தேர்வுகளை எழுதினான். தேர்வுகள் முடிந்த கையோடு நுழைவுத் தேர்வுகளுக்கும் தயார் செய்தான். எண்ட்ரண்ஸ் எக்ஸாம் என்பது அடுத்த கிலி. இருப்பினும் சலசலக்கவில்லை காரியத்தில் கண்ணாயிருந்த இந்தப் புலி.
அதற்கெனத் தனித் தயாரிப்புக்கள். ஒரு முழு வருஷப் படிப்பையும் சேர்த்து ஓரிரு மாதங்களுக்குள் மீண்டும் படிக்கவேண்டிய நிலை. நன்றாகவே படித்தான்.
"என்னப்பா நல்லாப் படிக்கிறியா? கவனமாப் படி" என்றெல்லாம் நினைவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் சுந்தரராஜனும் இல்லை. நினைவுபடுத்தப்பட வேண்டிய சூழ்நிலையில் இன்பராஜனும் இல்லை. குறிக்கோளில் தெளிவாய் இருப்பவனிடம் குறுக்கு விசாரணை எதற்கு?
நுழைவுத் தேர்வுகளும் நல்லமுறையில் எழுதி முடித்தான். போர் முடிந்து தாயகம் திரும்பிய வீரனாய் நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய நேரத்திலும் பரீட்சை முடிவுகள் நல்லவிதமாய் வரவேண்டும் என்ற சற்றே பயம் கலந்த நம்பிக்கை அவனுக்குள் பலவாறாய்க் கூட்டணி நடத்தியது.
முடிவுகளை எடுக்கும் திறன் தனக்கு இல்லை எனினும் எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சோவாரிப் பிள்ளையார் கோவிலுக்குச் சென்றான். பிள்ளையாரிடம் மனமுருக வேண்டிக்கொண்டு அர்ச்சகரிடம் சற்றே பேசிவிட்டு வீடு வந்து சேர்ந்தான்.
பரீட்சை முடிவுகள் நல்ல விதமாய் வந்தன. அவன் எதிர்பார்த்திருந்த படியே 1150க்கு மேல் எடுத்திருந்தான். சந்தோஷம். இதுகாறும் அவன் உழைத்த உழைப்பிற்குத் தக்க ஊதியம். கைமேல் பலன். மொத்த வீடும் குதூகலத்தில் திளைத்தது.
லட்சுமி அம்மாள் ஆசையாக மகனை உச்சி மோந்து நெற்றியில் ஆதுரத்தோடு முத்தமிட்டார். எத்துணை முத்தங்கள் இருந்தாலும் உச்சந்தலையில் இடும் அந்த ஒற்றை முத்தத்திற்கு ஈடாகுமா? தாய்மையின் நேசத்தினை உள்ளுணர்ந்தான் இன்பராஜன். அம்மாவிடம் இருந்து கிடைக்கும் அளப்பரிய பரிசு அது!
சுந்தரராஜன் எப்பொழுதும் போல "ரொம்ப சந்தோஷம்பா! உன் திறமைக்கும், விடாமுயற்சிக்கும் நல்ல பலன் கெடைச்சிருக்கு. நினைச்சதை சாதிச்சுட்டே" என்று சிரித்தபடியே தோளில் தட்டிக் கொடுத்தார். "ஆசீர்வாதம் பண்ணுங்கப்பா" என்று அவர் காலில் விழுந்து நமஸ்கரித்தான்.
"டேய் அண்ணா.. கலக்கிட்டடா.. கங்கிராட்ஸ்" என்ற படியே ஓடி வந்து கைகொடுத்தாள் ஜனனி.. "தாங்க்ஸ் டா ஜனனிக்குட்டி" என்று சிரித்தபடியே சிலாகித்தான் இன்பராஜன்.
பாதிக் கிணறு தாண்டியாயிற்று. மீதிக் கிணறு? நுழைவுத் தேர்வு முடிவுகளும் இவன் விருப்பங்களுக்கு ஏற்றவாறு நடக்க வேண்டுமே!
அன்று மாலை நேரம் சற்றே ஓய்வாக ரேடியோ கேட்கலாம் என்று எண்ணி, வானொலிப் பெட்டியில் இலங்கை வானொலிக்கான அலைவரிசைக்கு டியூன் செய்தான். BH அப்துல் ஹமீது தன் கவர்ச்சிக் குரலில் களேபரம் பண்ணிக் கொண்டிருந்தார் வழக்கம் போல. "மதுரையில் இருந்து நேயர் கதிரேசன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இதோ இந்தப் பாடல்" என்றதைத் தொடர்ந்து அந்தப் பாடல் ஒலிபரப்பானது.
"நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை..."
(தொடரும்..)
Labels: கனாக் காணும் காலங்கள், தொடர்கதை