கோபத்தின் வெளிப்பாடு
உனக்கு நான் என்ன
தீங்கு இழைத்தேன் இதுவரை?
புரட்டிப் பார்த்ததில் புத்தி
சுத்திக்கொண்டதே மிச்சம்!
ஏதேனும் மனக்குமுறல் இருந்தால்
பேசித் தீர்த்திருக்கலாமே?
நல்ல இடைத்தரகர்கள்
கிடைப்பது அரிது என்பதனால் தான்
இடிபோல இறக்கினாயோ உன்
கோபக் கனல்களை?
இதைக் கோபம் என்பதா?
கொலைவெறி என்பதா?
என் பொறுமையின் உச்சபட்ச
விளிம்பின் உயரம் தொடவைத்த
பின்னும் ஏனிந்த உக்கிரம்?
உன்னைப் போல் என்னால்
நினைத்த நேரத்தில்
பழிதீர்க்க முடியாது
என்ற பகட்டா?
ஏதோ ஆரம்பித்தாய்
சற்றே தளர்ந்திடுவாய் என்று
சலியாத நம்பிக்கையுடன் இருந்தேன்
என் முரட்டு நம்பிக்கையும்
குருட்டு நம்பிக்கையானது
குறுகிய கால அளவில்!
யார் மீது கோபம் உனக்கு?
அதைச் சொல்லிவிட்டுத் துவக்கு
அடுத்த ஆட்டத்தையாவது!
எதிராளிகள் களைப்படைவது பற்றிக்
கவலையே கொள்ளாத போராளியா நீ?
நிராயுதபாணியாக நின்றாலும்
நிறுத்தி யோசிக்க இயலாத நீசனா நீ?
விதிமுறைகளே படிக்காத உன்னிடம்
வரைமுறைகளை எதிர்பார்ப்பது தகுமா?
ஜாதி வேறுபாடுகள் பார்ப்பதில்
சமர்த்தனானாயோ? மேல் ஜாதிக்காரன் நீ
என்பதனால் வந்த மெத்தனமா இது?
எதிர்ப்பின் எல்லை கடந்தால்
வெள்ளமாய்க் கொட்டுகிறாய்.
அளவு கடந்த பாசமா?
அடக்க முடியாத துவேஷமா?
உணர்ச்சிகளை வடிகட்டுதல் கடினம்.
உணர்வுகளைக் கூடவா நெறிப்படுத்த
இயலாது உன்னால்?
உன் ஊமைக் கோபத்திற்கு ஆளாகி
ஊமையாய் நின்ற போதிலும்
உள்ளம் இரங்கவில்லையே நீ?
யார்மீதோ கொண்டிருந்த கிலேசத்தை
என் மீது நீ அவிழ்த்தது போல்
நானும் காட்டவா உன்மேல் இருக்கும்
வெளியிடமுடியாத வெறுப்பை?
உனக்கிருக்கும் வீரியமும், வெறியும்
எனக்கும் இருக்கும் என ஏன்
எண்ண மறுக்கிறாய்?
என்ன தான் ஏசினாலும்,
உன் தாக்குதலால் கட்டுண்டு,
பார்ப்பவர்களிடம் நான் கூறும்
ஒற்றை வரியிலான பதில்.
"சர்வம் வருணார்ப்பணம்".
Labels: கோபம், நடைமுறை நிகழ்வுகள்